Friday, March 12, 2010

நித்தமும் ஆனந்தம்



நித்யானந்தா -ரஞ்சிதா. இன்றைய நாட்களில் பதிவர்களால் அதிகம் விவாதிக்கப் படுபவர்கள். சாமியாராய் இருந்து கொண்டு சல்லாபம் செய்யலாமா ? என்பதுதான் .

இது ஒன்றும் இப்போது புதிதாக நடந்தது இல்லை. இதுபோல் தமிழகம் நிறைய கண்டிருக்கிறது. ஆனாலும்,நம் கூச்சல்கள் அடங்கவில்லை. ஒரு பிரச்சினை நடந்தவுடன் அரசாங்கம் அது திரும்ப நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்வதும், பிறகு அதை மறந்து விடுவதும் பின்பு அதே பிரச்சினை திரும்ப வந்தவுடன் அதே நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் வாடிக்கைதான். காவிரி பிரச்சினை முதற்கொண்டு .அந்த மனநிலைமைதான் மக்களிடமும்.

மரணத்தின் மீதான பயம் மனிதர்களை ஆட்டுவிக்கிறது. சக மனிதனிடம் புரிதல் இல்லாததினால் அதிக பிரச்சினைகள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் போது சாமியார்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அப்போது "குருவி உட்கார பனம் பழம் விழும்" உடனே சாமியார் கடவுளாகிறார். நம் பிரச்சினை தானாக தீர்ந்தாலும் கூட சாமியார்தான் என்று நினைத்து நாம் அவரை பிரபலமாக்குவோம்.

உண்மையிலேயே சாமியார்கள் மக்களை நல்வழிப் படுத்தும் முயற்ச்சியில் இருந்தால் கூட நாம் அவரை புகழ் போதைக்கு அடிமையாக்கி விடுகிறோம்.பண போதைக்கு அடிமையாக்கி விடுகிறோம்.புகழுக்கு மயங்காத மனிதர்களே இல்லை எனலாம்.

பொதுவாக பெண்களோடு அதிகம் தொடர்புடை துறைகள்தான் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகின்றன.இது ஏன் என்று புரியவில்லை?குறிப்பாக கல்வி,சினிமா,மருத்துவம்,ஆன்மிகம் இன்னும் பல. கொலை, கொள்ளை, மோசடி என்று அன்றாடம் குற்றங்கள் நடந்து கொண்டுத்தான் இருக்கிறது. நம் மக்கள் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்.ஆனால், சாமி,மதம்,ஜாதி,இன விசயங்களில் தவுறு நடந்தால் கொதித்துப் போகிறார்கள்.மனிதத்திற்கு மட்டும் இங்கு என்றுமே மரியாதையில்லை.


நித்யானந்தாவிடம், கோடிக்கணக்கில் சொத்து உள்ளது என்கிறார்கள். அவரிடம் மட்டுமல்ல நிறைய சாமியார்கள் பணத்தை உபயோகமில்லாமல் வைத்திருக்கிறார்கள் இங்கு,வேலூரில் ஒரு சாமியார் தங்கத்திலே கோவில் கட்டி வைத்திருக்கிறார்.அதனால் நாட்டுக்கு எந்தப்பலனுமில்லை.திருப்பதியில் கணக்கிட முடியாத அளவிற்கு பணம் ,நகை சொத்துக்கள் உள்ளன.அவைகளால் பொது மக்களுக்கு எள்ளளவும் பயனில்லை.மக்கள் இன்னும் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் ஒரு மனிதன் பசியோடு துடிக்கும்போது மீந்த உணவை சாக்கடையில் வீசி எறிவதுபோல.


கும்பகோணத்தில் தீயில் குழந்தைகள் வெந்த போது கடவுள் மீது எனக்கு வெறுப்பு ஏற்ப்பட்டது. என்ன பாவம் செய்தார்கள். தீயிலா போக வேண்டும் அவர்கள் உயிர். ஒரு துளி நெருப்பு பட்டால் நம் உடல் தாங்குவதில்லை. சதை பொசுங்கும் போது அந்த பிஞ்சுகள் எப்படி கதறியிருப்பார்கள். என்ன கொடுமையிது? இந்த வயதில் அவர்களுக்கு ஏன் இந்த தண்டனை? சாகத்தான் பிறந்தார்களேன்றால்,அவர்களை படைக்காமல் விட்டிருக்கலாமே?

மனிதர்களை நேசியுங்கள்! இயற்கையை நேசியுங்கள் !விட்டுக்கொடுத்து வாழப்பழகுங்கள்! விட்டுக் கொடுப்பவர்கள் என்றுமே கெட்டுப் போவதில்லை!மனிதர்களை தேடி உதவுங்கள் அப்பொழுதான் நமக்குதேவைப்படும்போது உதவி கேட்காமலே வரும். தேவையில்லாத கூச்சல் போடுவதை விட்டுவிட்டு அமைதியாய் இருங்கள்.அமைதி மனிதனை சிந்திக்க தூண்டும்.

இந்த விசயத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அன்பும், அமைதியும் அவரை உலகத்தின் மத்திக்கு இட்டுச் சென்றது. அந்த புகழ் கூட பாதிக்காமல் அமைதி அவரை காத்து நிற்கிறது.

கடவுள் எப்பொழுதுமே உங்களிடம் காசு எதிர் பார்ப்பதில்லை. அதை கோவிலில் கொட்டாமல் தேவைப் படும் மனிதனுக்கு உதவி செய்யுங்கள். அவனுக்கு அந்த இடத்தில் நீங்கள்தான் கடவுள்.

ஓடி ஓடி உழைக்கணும் ,ஊருக்கெல்லாம் கொடுக்கணும், அன்பை நாளும் விதைக்கணும். அற்புதமான வரிகள்.அனுபவித்து பாருங்கள் .


இப்படித்தான் எதையோ சொல்ல நினைத்து எங்கோ முடிகிறது என் எண்ணங்கள்.






இதுவரை பொறுமையாக படித்த என் நண்பர்களுக்கு நன்றி! பின்னூட்டமும்,ஓட்டும் தந்து எனக்கு உறுதுணையாய் இருங்கள்.
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...