Monday, February 22, 2010

குழந்தைகளை கவனிப்போம்!

இந்தப்பூமியில் நாம் பிறந்ததன் நோக்கம், இங்கு நமக்குள்ள வேலை என்னவென்று சிந்தித்தால்?

ஒரு நல்ல சந்ததியை உருவாக்குவதுதான். அதன் பொருட்டே உணவுதேடல்,பணத்தேடல் இன்னும்பிற. மற்ற உயிரினங்களின் வேலையும் அதுதான் என்றாலும், நாம் அதிலிருந்து வேறுபட்டு நிற்கிறோம்.

நம் குழந்தைகளுக்கு பணம், சொத்து மட்டும் சேர்த்து வைத்தால் போதும் என்று நினைப்பது, சுதந்திரமாய் திரியும் பறவைகளை கூண்டிலடைத்து வளர்த்து பெருமைப்படுவது போல். அவைகளை நாம் காப்பாற்ற வேண்டும் என்று அவசியமில்லை கூண்டை திறந்தாலே போதும் தனக்கான உணவை அது தேடிக்கொள்ளும். அதுபோல் நாமும் பிள்ளைகளுக்கு இறக்கைகள் வளரவிடாமல் தங்க கூண்டுகள் செய்துகொண்டிருக்கிறோம்.

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.
என்கிறார் திருவள்ளுவர். ஆனால், நாம் கேட்கிறோமா என்றால் கேள்விக்குறிதான் .

பிள்ளைகளின் கேள்விகளை செவிமடுத்துக் கேட்டு,அதற்க்கு பதலளித்தால் அவர்களுக்கு வாழ்க்கை புரிந்துவிடும்.நாம் கவனிக்காது போனால் அந்த கேள்வி வேறிடத்தில் கேட்கப்பட்டு பதில் திரித்து கூறப்பட்டால், அவர்கள் தவறு அங்கிருந்து ஆரம்பமாகும்.ஒரு நல்ல சந்ததியை உருவாக்க நாம் பல நிலைகளை அவர்களோடு கடக்க வேண்டும்.தந்தையாக,ஆசிரியராக,நல்ல தோழனாக இப்படி பல நிலை.

என் சிறு வயதில் பள்ளியில் தர அட்டையை(ரேங்க் கார்டு) கொடுத்து பெற்றோரின் கையொப்பம் வாங்கி வரச் சொல்வார்கள். மதிப்பெண் குறைந்த என் சக நண்பர்கள் வீட்டுக்கு செல்ல பயப்படுவார்கள் "என் அப்பா அடி கொன்றுவிடுவார்,என் அம்மா சூடு வைப்பார்"என்று கூறி வீட்டை விட்டு ஓடிவிடுவேன் என்று கூட சொல்வார்கள் .ஆனால்,பாடங்களை விட சில கலைகளில்,விளையாட்டுகளில் அவர்கள் வல்லவர்கள்.அதை ஊக்கப்படுத்தியிருந்தால் அவர்களின் வாழ்க்கை பிரகாசமயிருந்திருக்கும்.

பள்ளிகளின் தரவரிசை அட்டையை மட்டுமே வைத்து மதிப்பிடக்கூடாது. ஒன்று அவர்களின் குறைகளை போக்க முயற்ச்சிக்க வேண்டும்.அல்லது,விருப்பமான துறைகளில் ஊக்கப்படுத்தவேண்டும். நம்முடைய கனவுகளை கண்டிப்பாக திணிக்க நினைத்தால், நம்மை விட்டு விலகிப்போய்விடுவார்கள்.

வாடிக்கையாளர்களையும்,மேலதிகாரிகளையும் திருப்திப்படுத்த சிரமங்களை மேற்கொள்ளும் நாம், பிள்ளைகளுக்காகவும் விட்டுக்கொடுத்துப் பழக வேண்டும்.
திரைப்படங்களுக்கும்,தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்கும் நாம் பிள்ளைகளை கவனிக்க மறந்து விடுகிறோம்.

இந்த காலத்தில் குழந்தைகளுக்கு சுமை அதிகம்.பதினைந்து மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்கிறார்கள்.அவர்களைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது.நாம் அனுபவித்த விளையாட்டுக்கள்,சுதந்திரம், உறவுகள் இன்று அவர்களுக்கு இல்லை ஆரோக்கியம் உட்பட .குழந்தைகளை குழந்தைகளாக வளரவிடவேண்டும் பொதி சுமக்கும் கழுதைகளாக அல்ல.

மனித வாழ்வு அற்புதமானது அதை அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும் .வீண் சண்டைகளை மனைவிடமோ,பிள்ளைகளிடமோ, மற்றவரிடமோ போட்டுக்கொண்டிருப்பதை விட வாழ்க்கையை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.குழந்தைகளை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.பிள்ளைகள் நம் பிரதிகள் அதை அழகாக செதுக்கவேண்டும. சிதைத்து விடக்கூடாது .ஆயிரம் குறைகள் இருந்தாலும் அவைகளை நம்மால் சரி செய்து மகிழ்ச்சியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை நமக்கிருந்தால் நம் குழந்தைகளுக்கும் அது தொற்றி அவர்களால் எந்த சூழலையும் சமாளித்து வெற்றி பெற முடியும்.

தியாகங்கள்தான் வாழ்க்கை, தியாகத்தால் பிறந்தது நம் தேசம்.நம் தியாகம் நம் பிள்ளைகளை நெறிப்படுத்தும்.தங்க கூண்டுகளை ஏற்ப்படுத்தாமல் சிறகுகள் வளர்வதை வரவேற்ப்போம்.









என் எழுத்து தேர்ந்த எழுத்தாளரைப் போல் இல்லாமலிருக்கலாம்.இதைப் பொறுமையாக படித்த நண்பர்களுக்கு என் நன்றி! என் சிறகுகள் வளர்ந்து கொண்டிருக்கிறது நானும் ஒருநாள் வானில் உயர பறப்பேன் என்ற நம்பிக்கையுடன்...
பின்னூட்டமும் ,ஓட்டும் தந்து என் சிறகுகளுக்கு வளர்ச்சி ஏற்படுத்துங்கள் .
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, February 13, 2010

மிருகங்களை காப்போம்!

மிருகங்களுக்கும் மற்ற உயிர் இனம்களுக்கும் இழைக்கப்பட்டு வரும் ஹிம்சையை காணும்போது நம் கண்களில் ரத்தம்தான் பெருக்கெடுத்து ஓடும் .

இந்த உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மிருகங்கள் நிறைய துன்பத்தைக்கண்டு மிகவும் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டு வருவதை தடுக்க ஒரு சிறிய முயற்சியும் செய்ய முன் வராத மனித இனத்தை அரக்க இனம் என்று கூறுவதில் சிறிது கூட தவறு இருக்க முடியாது.

மனிதன் ஆடு,மாடுகளை வெட்டி அவைகளை உணவாக சாப்பிடுகிறான்.பூனை,எலியை சாப்பிடுகிறது.கழுகு கோழிக்குஞ்சை சாப்பிடுகிறது.சிங்கம்,புலி,போன்ற மிருகங்கள் மற்ற மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுகிறது.

கடவுள் உயிரினங்களை மற்ற உயிர்களுக்கு உணவாக படைத்துவிட்டார். இந்த சூழ்நிழையில் மனிதன் மிருகங்களை கொன்று சாப்பிடக்கூடாது என்ற கூற்று அர்த்தமற்றது.

ஆனால், மனிதன் மிருகங்களை கொள்ளும் வரையில் அவைகளை அன்புடன் கவனித்து வர வேண்டும். அவைகளை கொல்லும்போது மிகவும் குறைவான ஹிம்சை ஏற்ப்ப்படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆடுகளையும்,மாடுகளையும் சிறிது கூட இடைவெளி இல்லாதபடி லாரிகளில் அடைத்து பள்ளங்களும்,குழிகளும் நிறைந்த சாலைகளில் பல நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருக்கும் நகரங்களுக்கு வேகமாக ஓட்டி செல்கிறார்கள். இவைகள் சிறிது கூட அசைய முடியாதபடி நின்றுகொண்டே பயணம் செய்கின்றன. இவைகளுக்கு தண்ணீர் கூட கொடுப்பதில்லை!

இந்த மிருகங்கள் நகருவதற்கு சிறிது கூட இடைவெளி இல்லாததினால் இவைகளுடைய கழுத்துக்கள் முறுக்கிக்கொண்டு விடுகின்றன.இவைகள் போய்ச்சேரவேண்டிய இடம் வந்ததும் அசையக்கூட முடிவதில்லை. கொலைககொண்டு அடித்து லாரியிலிருந்து கீழே தள்ளுகிறார்கள்.கீழே தள்ளும்போது சில ஆடுகளின் கால்கள் உடைந்து விடுகின்றன.நகர முடியாத இந்த ஆடுகளை ஒரு காலை மட்டும் பிடித்து இழுத்து செல்லும்போது,அந்த ஆடுகள் வேதனை தாங்காமல் அலறுவதை யாரும் கண்டுகொள்ளுவதில்லை.மேலும் பிரயனத்தின்போது வேதனையால் சில ஆடுகள் துடிதுடித்து இறந்தே போய்விடுகின்றன. அதயும் கூட வெட்டி விற்றுவிடுகிறார்கள்.

உணவாக பயன்படும் மிருகங்களை இப்படி கொடுமைப்படுத்தி கொல்லுவதுதான் மனிதப்பண்பா? மனிதன் பணத்திற்காக கொடிய பாவங்களை செய்ய சிறிதுகூட தயங்குவதில்லை.ஆடுகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமென்றால் அதற்க்கு நேரம் பிடிக்கும்.பணச்செலவு ஆகும்.ஆடுகளை சௌகரியமாக எடுத்துசெல்ல வேண்டுமென்றால்,இன்னும் பல லாரிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் அப்போது நிறைய பணம் செலவாகும் . எப்படியும் சாகப்போகிற மிருகங்கள்தானே?"எனக்கு வேண்டியது பணம் .இந்த மிருகங்கள் படும் வேதனையை பற்றி எனக்கு கவலையில்லை "என்ற வியாபர நோக்கோடு பணக்கலாச்சாரத்தை மனிதன் பின்பற்ற தொடங்கிவிட்டான்.

ஒரு மிருகத்தின் எதிரில் இன்னொரு மிருகத்தைக் கொல்லக்கூடாது என்று சட்டமே சொல்கிறது.நமது நாட்டில் நூற்றுக்கணக்கான ஆடுகளை வரிசையாக நிறுத்தி ஒவ்வொரு ஆட்டின் தலையாக வெட்டி வருகிறார்கள்.நமக்கு இப்படிபாட்ட நிலை ஏற்ப்பட்டால் நம்முடைய மனங்கள் எப்படி துடிதுடிக்கும்? ஈழத்தில் ஏற்ப்பட்டபோது ரத்தம் கொதிக்கவில்லையா?

உணவுக்கு மட்டும் மனிதன் மிருகங்களை கொல்வதில்லை. உடைகளை தயாரிப்பதற்கும்,அழகு சாதனங்கள் தயாரிப்பதற்கும்,வாசனைப்பொருட்கள் தயாரிப்பதற்கும் ,சித்ரவதை செய்யப்படுகிறது.

பெரும்பாலான மிருகங்களின் தோல்கள் அவை உயிருடன் இருக்கும்போதே உரைக்கப்படுகின்றது .

முதலைகள் நீளவாட்டில் கீறி,வேதனையால் துடிதுடித்துக்கொண்டிருக்கும்போதே அவைகளின் தோல்கள் உரிக்கப்படுகின்றன .

ஆப்கானில் காரகுல் ஆடுகளுக்கு பிறக்கும் குட்டிகளின் தோல் மிருதுவாகவும்,பளபளப்பாகவும் இருக்கும்.இந்த ஆட்டுக்குட்டியின் தோலுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது.நிறைய விலை கொடுத்து இந்த தோலை வாங்கிக்கொள்ள நிறைய பேர் தயாராயிருக்கிறார்கள்.இந்த ஆட்டுக்குட்டி பிறந்த பிறகு இதனுடைய தோலின் மிருதுத்தன்மையும் ,பளபளப்பும் குறைந்துவிடுகின்றன .தாய்மை பெற்ற ஆட்டை குறைப்பிரசவம் ஆகும் வரையில் இரும்புத்தடியால் அடித்து,குட்டி கீழே விழுந்தவுடனேயே தோல் உரிக்கப்பட்டுவிடுகிறது.

தெற்கு அமெரிக்காவில் சில மிருகங்களின் தோலை உரிக்க மிகவும் குரூரமான வழி கையாளப்படுகிறது.

பழுக்க காய்ச்சிய இரும்புக்கம்பியை மலம் கழிக்கும் துவாரத்தின் வழியாக உடலுக்குள் நுழைத்து விடுகிறார்கள்.அந்த மிருகம் வேதனையால் துடிதுடித்து கதறி புரண்டு முடிவில் இறந்து விடுகிறது .அது சாகும்போது தோல் கழண்டு தானாகவே விழுந்துவிடுகிறது .

பாம்புகள்,முதலைகள்,ஓணான்கள்,மேலும் ஊர்ந்து செல்லும் பலவகை உயிரினங்களின் தோல்கள் கைப்பைகள் ,பர்ச்கள்,பெல்ட்டுகள்,போன்றவைகளை தயாரிப்பதற்குபயன்படுத்தி வருகிறார்கள் .

பாம்பின் தோலை உரிப்பதற்கு பாம்பின் தலையை ஒரு செடியின் மீது வைத்து அதன் தலையில் ஆணி அடித்து இறக்கி அந்த பாம்பை செடியோடு இணைத்து விடுகிறார்கள் .காலைக்கொண்டு பாம்பின் வாழை தரையில் அழுத்தி பிடித்து ,கூறிய கத்தியினால் பின் தலையிலிருந்து வாளின் நுனி வரை நீளமாக கீறி தோலை உருவி எடுக்கிறார்கள் .தோல் உரிக்கப்பட்ட இந்த பாம்பு இரண்டு ,மூன்று நாட்கள் வரை துடித்டித்து இறக்கின்றன.

எதியோப்பிய பூனைகள் ஒரு சிறிய கூண்டில் வாழ்நாள் முழுவதும் அடைத்து வைக்கப்படுகின்றன.இதனுடைய வாசனை சுரப்பியிலிருந்து எடுக்கப்படும் பொருளுக்கு நல்ல விலை கிடைக்கிறது .

ஒவ்வரு பத்து நாட்களுக்கு ,பூனையின் வேதனையை பொருட்படுத்தாது சுரண்டி எடுத்து விற்கிறார்கள்.

மிருக வதை தடுப்பதற்கு அரசாங்கம் ஒரு நிர்வாகத்தையே உருவாக்கி இருக்கிறது .நமது நாட்டில் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குபவர்களில்,இந்த நிர்வாகமும் ஒன்று .ஆனால்,அரசாங்கம் ,நீதிபதிகள்,போலீஸ்காரர்கள்,பொதுமக்கள், அனைவரும் இந்த நிறுவனத்திற்கு பக்க பலமாக நின்றால்தான் மிருகங்களுக்கு இழைத்து வரும் அநியாயத்தை தடுத்து நிறுத்த முடியும் .

இந்த பொருட்களை நாம் தேடி வாங்காது புறக்கணித்தாலே மிருகங்களுக்கு செய்யும் நன்மை .செய்வோமா?







இதுவரை பொறுமையாக படித்த நண்பர்களுக்கு நன்றி ,பின்னூட்டமும் ,ஒட்டுமே என்னை ஊக்கப்படுத்தும்...
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...